இலங்கை வடக்கு மாகாணத்தில் தேர்தல் முடிந்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அக் கூட்டணியின் பிரதான வேட்பாளர் சி.வி.விக்கினேஸ்வரன், வடக்கு மாகாணத்தின் முதல்வராக போகிறார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரை மக்களுக்கு காட்டிய அரசியல்வாதிகளில் இருந்து விக்னேஸ்வரன் வித்தியாசமாக இருப்பது, கூட்டமைப்பு இதுவரை செய்துவந்த அரசியலில் இருந்து வேறுபட்டு இருக்கப்போகிறது. அதை இதுவரை காலமும் தமிழ் தேசிய அரசியலுக்கு பழக்கப்பட்டவர்களால் சகித்துக்கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. சகித்துக்கொள்வது நல்லது.
யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டு ஜெயித்துள்ள விக்னேஸ்வரன், யாழ்ப்பாணத்தில் பிறந்தவரல்ல. கொழும்பு ஹல்ஸ்ட்ரோஃப்பில் பிறந்தவர். தனது வாழ்வின் முதல் 9 ஆண்டுகளையும், சிங்கள பகுதியான குருணாகலவில் வசித்தவர். அதன்பின், வசித்தது, மற்றொரு சிங்கள நகரமான அனுராதபுர. கல்வி கற்றது, கொழும்பு ராயல் கல்லூரி. தேர்தலுக்கு முன்புவரை கொழும்புவில் முழுமையான சிங்கள வி.ஐ.பி.களுடனும், அரசியல் தலைவர்களுடனும் மிங்கிள் பண்ணி வாழ்ந்தவர்.
2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகளை யுத்தத்தில் அழித்ததற்காக இலங்கை அரசு நடத்திய வெற்றி விழா கொண்டாட்டங்களில் அரசு வி.ஐ.பி.களுடன் கலந்து கொண்டவர், விக்கினேஸ்வரன்.
“புலிகளை அழித்ததை வெற்றி விழாவாக கொண்டாடுகிறார்களே” என தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் வெளிநாட்டு தமிழர்களின் மேடைகளில் கண்கள் சிவக்க முழங்கிக் கொண்டிருந்த நேரத்தில், விக்கினேஸ்வரன் அரசியலுக்கே வரவில்லை. அப்போது ‘கண் சிவந்த’ தமிழ் எம்.பி.க்கள் இப்போது விக்கினேஸ்வரனுக்கு ‘மண் சிவக்க’ சிவப்பு கம்பள வரவேற்பு கொடுப்பதில் பிசி.
விக்கினேஸ்வரனின் இரு மகன்களும் திருமணம் செய்திருப்பது, இரு சிங்கள பெண்களை. ஒரு மருமகள், இலங்கை அரசின் தற்போதைய அமைச்சர், வாசுதேவ நாணயக்காரவின் மகள். மற்றைய மருமகள், முன்னாள் எம்.பி. கேசரலால் குணசேகரவின் சகோதரர் மகள். இருவரும் பாரம்பரிய சிங்கள குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள்.
வடக்கு மாகாண தேர்தல் முடிவு பற்றி, இலங்கை ஜனாதிபதி மகிந்த என்ன சொல்கிறார்?
“வடக்கில் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும். வடக்கில் முதலமைச்சராக விக்னேஸ்வரன் வருவது பற்றி நான் மகிழ்ச்சியடைகிறேன். காரணம், என்னதான் தமிழராக இருந்தாலும் அவர், தென் பகுதியில் சிங்களர்களுடன் ஒன்றாக, ஒரே குடும்பமாக வாழ்ந்து வருபவர்.
வடக்கு மாகாணத்தை ஆட்சி செய்ய போகிற அவர், எனது அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் கேசரலால் குணசேகர ஆகியோரின் உறவினர். ஒரு விதத்தில், எனக்கும் அவர் தூரத்துச் சொந்தம்” என்கிறார், ஜனாதிபதி ராஜபக்ஷே