மஹியங்கனை பள்ளிவாசல் பல வருடங்களுக்கும் மேலாக இயங்கிவரும் ஒரு பள்ளிவாசல் என்பது சகலரும் அறிந்த விடயம். மர்ஹும் அஷ்ரப் உள்ளிட்ட பலர் அங்கும் தொழுதும் உள்ளார்கள். பள்ளிவாசல் சட்டரீதியாக பதிவு செய்யப்பட்டதா இல்லையா என்ற வாதங்களைவிட அங்கு பள்ளிவாசல் இருந்துள்ளது. ஜும்ஆ உள்ளிட்ட இறை வணக்க வழிபாடுகளும் நடைபெற்றுள்ளன என்பதே பிரதானமானது.
அப்பள்ளிவாசல் ஸ்த்தாபகரும், பள்ளிவாசல் தலைவருமான சீனி முஹம்மது ஜப்னா முஸ்லிம் இணையத்துடன் இறுதியாக தொலைபேசியில் கதைக்கும்போது கூட அப்பள்ளிவாசல் குறித்து கண்ணீர் மல்கியிருந்தார்.அப்படிப்படட்டவரா மஹியங்கனையில் பள்ளிவாசலே இருக்கவில்லையென கடிதம் எழுதினார் என ஒட்டமொத்த முஸ்லிம் சமூகத்திற்கும் கேள்விகள் எழுவதில் நியாயமுள்ளது.
பௌத்த சாசன அமைச்சிற்கு அவர் எழுதிய கடிதமும் தினகரன் வாரமஞ்சரி பத்திரிகையில் 28-07-2013 வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்தக் கடிதம் தொடர்பில் எமக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களை இங்கு அப்படியே தருகிறோம்.
தினகரன் வாரமஞ்சரியில் பள்ளிவாசல் பற்றிய, அப்பள்ளிவாசல் தலைவரின் கடிதம் ஞாயிற்றுக்கிழமை வெளியாக முன்னரே, ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு இலங்கை நேரப்படி சனிக்கிழமை, 27-07-2013 அன்று மாலை 6 மணியளவிலேயே இவ்வாறான ஒரு கடிதம் தினகரன் வாரமஞ்சரியில் வெளியாகவுள்ளதாக தகவல் கிடைத்தது.
அதேவேளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பிரதான தமிழ் மொழிபெயர்ப்பாளர் ராகுல்லன்தான் சிங்களத்தில் காணப்பட்ட இந்த கடிதத்தை தமிழில் மொழிபெயர்த்தவர் ஆவார். இந்த விவகாரத்துடன் முஸ்லிம் பிரதியமைச்சர் ஒருவர் நேரடி சம்பந்தப்பட்டுள்ளார்.
இவ்வாறான ஒரு கடிதம் வெளியிடப்பட்டதன் பின்னர் தம்மை சந்திக்கவுள்ள ஆளும்கட்சி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் மஹியங்கனையில் பள்ளிவாசல் இருக்கவில்லை என அந்தக் கடிதத்தையும், பத்திரிகைச் செய்தியையையும் காண்பிப்பதே இங்கு நோக்கமாக இருந்துள்ளது. அதற்கேற்பவே தற்போதுவரை நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மஹியங்கனையில் பள்ளிவாசலே இருக்கவில்லை என்ற பிரச்சாரம் தற்போது முன்னெடுக்கப்படுகிறது. வேடுவர் தலைவர் உள்ளிட்ட பௌத்த குருக்களும் இந்தப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த பிரச்சாரத்திற்கு வலுசேர்ப்பதாகவே சீனி முஹம்மது பெயரில் வெளியாகியுள்ள கடிதமும் அமையப்போகிறது.
அதேநேரம் பள்ளிவாசல் தலைவரின் இந்த செய்தி வெளியானதிலிருந்து அவருடன் தொடர்புகொள்ள ஜப்னா முஸ்லிம் இணையம் 15 க்கும் மேற்பட்ட தடவைகள் முயன்றது. அவரின் கையடக்க தொலைபேசியில் ரிங் ஒலிக்கிறதே தவிர, மறுபக்கத்தில் எந்த பதிலும் இதுவரை வழங்கப்படவில்லை.
மஹியங்கனை பள்ளிவாசல் பதிவுசெய்யப்படாமல் இருந்திருக்கலாம். அதற்காக அது பள்ளிவாசலாக பயன்படுத்தப்படவில்லை என்பது சுத்தப்பொய். அந்த அல்லாஹ்வின் இல்லத்தின் சுஜுது செய்த பலர் இதற்கு ஆதாரமாக உள்ளனர். பெரும்பான்மை சமூகத்தை திருப்திப்படுத்துவதற்காக மஹியங்கனையில் பள்ளிவாசலே இல்லையென கூறவருவது முற்றிலும் கணடிக்கத்தக்கது எனலாம்.!
இங்கு மேல்மாகாண சபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் எங்களிடம் ஒருமுறை கூறியதை ஞாபகப்படுத்த விரும்புகிறோம். நாட்டில் பதிவு செய்யப்படாத பள்ளிவாசல்களைவிட, பதிவு செய்யப்படாத பௌத்த விகாரைகளே அதிகம் என்பதாகும்..!
MidiyalaHot Admin...
-jaffnamuslim
No comments:
Post a Comment